குப்பை கொட்டும் மையங்கள் ஒழிப்பு... சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்
சென்னை: குப்பைக் கொட்டும் மையங்கள் இல்லாத சென்னையை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.
தெருக்களில் ஆங்காங்கே பெரிய சைஸ் குப்பைத் தொட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருந்து கொண்டு சேர்க்கப் படும் அக்குப்பைகள் அருகிலிருக்கும் குப்பை மையங்களுக்கு கொண்டு செல்லப் படும். பின்னர் அங்கிருந்து குப்பை கிடங்கை சென்றடையும்.
ஆனால், சமயங்களில் இந்த குப்பை தொட்டிகள் மற்றும் மையங்கள் நிரம்பி வழிந்து தெருக்களையும் நாறடித்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் செல்வோர் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
எனவே மக்களுக்கு இத்தகைய அசவுகரியங்களைத் தடுக்கும் விதமாக இப்புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது மாநகராட்சி. இதன்மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் 5,000 டன் குப்பைகள் வீடுகளிலிருந்து நேரடியாக குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குப்பைக் கிடங்குகள்...
சென்னையின் கழிவுகள் அனைத்தும் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய 2 இடங்களில் உள்ள குப்பை கிடங்குகளில்தான் கொண்டு சேர்க்கப் படுகின்றன.
குப்பை மையம் டூ கிடக்கு....
வீடுகளிலிருந்து ஊழியர்கள் முலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த மண்டலங்களில் உள்ள குப்பை கொட்டும் மையங்களில் சேகரிக்கப்பட்டு, அதன் பிறகுதான் குப்பை கிடங்கிற்குக் கொண்டு செல்லப் படுவது வழக்கம்.
பொதுமக்கள் அவதி...
குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள இத்தகைய குப்பைக் கொட்டும் மையங்களால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
துர்நாற்றம்...
துர்நாற்றம் அடிப்பதாகவும், ஈக்கள் தொல்லை இருப்பதாகவும், இதனால் நோய்த் தொற்று அபாயமிருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து மாநகராட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது.
நேரடியாக குப்பைக் கிடங்கிற்கு....
இதன்படி, மண்டல அளவில் உள்ள குப்பை கொட்டும் மையங்களை அகற்றிவிட்டு, குப்பைகள் வீடுகளிலிருந்து நேரடியாக குப்பை கிடங்குக்கு அனுப்பப்படும்.
12000 குப்பைத் தொட்டிகள்...
சென்னையில் மொத்தம் 12,000 குப்பைத் தொட்டிகள் உள்ளன. குப்பைத் தொட்டிகள் இல்லாத பகுதிகளில் வீடுகளிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் மூலம் நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
400 வாகனங்கள்...
இவற்றை குப்பை கொட்டும் மையங்களுக்கும் அங்கிருந்து குப்பைக் கிடங்குகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள், காம்பேக்டர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
புதிய வாகனங்கள்...
அதிக எடை கொண்ட குப்பைகளை வெகு தூரம் கொண்டு செல்ல, ஒரே வானத்தை பயன்படுத்தினால் அது சீக்கிரம் பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சியின் இப்புதிய திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமெனில், கிட்டத்தட்ட 800 வாகனங்கள் தேவைப்படும்.
விரைவில்...
எனினும், விரைவில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலனில் அக்கறை...
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டத்தால், நகரத்தின் உள்ளே குப்பை தேங்குவதை தடுக்கலாம். தற்போது உள்ள குப்பை கொட்டும் மையங்களை அகற்றுவதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட தொல்லைகள் இருக்காது" என்றார்.