சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ‘டம்மி’ பதவிக்கு மாற்றப்பட்டது ஏன்?
சென்னை: சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்து வந்தார். இவர் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டு சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த ஜெ.கே. திரிபாதி சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா பிறப்பித்துள்ளார்.

டம்மி பதவிக்கு மாற்றம்
2012ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வந்து ஜார்ஜ் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாநகர ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு, கமிஷனர் ஜார்ஜை மிகவும் ‘டம்மி' பதவியான சிறைத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

குவிந்த புகார்கள்
கடந்த சில நாட்களாகவே சென்னை நகர போலீஸ் கமிஷனர் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணமிருந்தன. அதிகாரவர்க்கத்திற்கு வேண்டியவர்கள் தொடர்பான சில பிரச்னைகளில் கமிஷனர் ஜார்ஜ் தவறான நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை விசாரணையும் நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

டி.கே.ராஜேந்திரன்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி கூறும் உத்தரவுகளை நிறைவேற்றி தருவார் என்பதற்காக அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கவுரவத்திற்குரிய சென்னை நகர போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன், சென்னையில் ஏற்கனவே போக்குவரத்து துணை, இணை கமிஷனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
தேர்தல் நெருங்குவதால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி சென்னை நகர போலீஸ் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள ராதாகிருஷ்ணனும் ஒருவர் பதவிக்கு மற்றொருவர் என்று இருவருமே மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திரிபாதிக்கு முக்கியத்துவம்
கமிஷனர் ஜார்ஜ் சட்டம் ஒழுங்கு பதவிக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறைதுறைக்கு மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் இல்லாத பதவியில் இருந்த திரிபாதிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications