காதலிக்க மறுத்த மாணவி.. பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்து.. பல்கலைக்கழகத்தில் என்ஜினியர் வெறிச்செயல்
காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பாட்டிலை உடைத்து குத்தி என்ஜினியர் வெறிச்செயலில் ஈடுபட்டார்.
கோவை: ஒருதலையாக காதலித்த என்ஜினியர், காதலிக்க மறுத்த மாணவியை பல்கலைக்கழகத்தில் வைத்து பாட்டிலில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் உப்பாரவீதியை வசித்து வருபவர் மாடசாமி. இவருக்கு 21 வயதில் கனகலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவருக்கு 28 வயதான வேம்புராஜ் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமாகி இருக்கிறார். தேனி மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவரான வேம்புராஜ், கனகலட்சுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர், அவரை காதலிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இதனை கனகலட்சுமி கடுமையாக எதிர்த்துள்ளார். ஆனால், கனகலட்சுமியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட வேம்புராஜ் தொடர்ந்து அவருக்கு போன் செய்து டார்ச்சர் செய்துள்ளார். மாணவி செல்போன் எண்ணை மாற்றினாலும், எப்படியாவது வேம்புராஜ் புதிய எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொந்தரவு தருவது வாடிக்கையாக மாறிவிட்டது.
இதனால் கடுப்பாகிப் போனி கனகலட்சுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அவரது பெற்றோரும் வேம்புராஜை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.
ஆனாலும், அதனை மதிக்காமல் வேம்புராஜ் கனகலட்சுமியின் பல்கலைக்கழகத்திற்கே வந்து பார்த்து தொந்தரவு கொடுப்பது தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோவைக்கு வந்து பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற வேம்புராஜ் கனகலட்சுமியை சந்தித்துள்ளார். அப்போது அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் கேட்டுள்ளார். இதற்கு கனகலட்சுமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேம்புராஜ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து உடைத்து கனகலட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். கனகலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மாணவிகள் கதறி கூச்சல் போட்டனர். இதனைக் கண்ட வேம்புராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை, சக மாணவிகள் வடவள்ளிப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோவை சிறுவாணி சாலையில் பதுங்கி இருந்த வேம்புராஜ் போலீசாரிடம் சிக்கினார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வேம்புராஜ், சிறையில் அடைக்கப்பட்டார்.