முடிஞ்சா நடவடிக்கை எடுங்க, இல்லாட்டி ராஜினாமா பண்ணிடுங்க... "ரமணா" விஜயகாந்த் கோரிக்கை!
சென்னை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார் கூறியுள்ள ஒப்பந்ததாரர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் இத்துறையின் அமைச்சர் என்கிற முறையிலும், தமிழகத்தின் முதல்வர் என்ற வகையிலும் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பொறுப்பாகும். இயலாத பட்சத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்குப் போயிருந்த விஜயகாந்த் அங்கிருந்து திரும்பி விட்டார். திரும்பிய நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:

ஒரு நாட்டில் நடக்கின்ற ஆட்சியில் ஊழல் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் ஊழலிலேயே ஆட்சி நடப்பது தமிழகத்தில்தான் என்று பொதுமக்கள் பேசும் அளவிற்கு லஞ்சமும், ஊழலும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல தமிழக பொதுப்பணித்துறையில் பொறியியல் ஒப்பந்ததாரர் சங்கத்தினர் நான் நடித்த ரமணா திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுவது போல, லஞ்சம் கேட்டு மிரட்டிய ஊழல் அதிகாரிகளின் முதல் பத்து பேர் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியல் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் பொதுப் பணித்துறையின் நீர் ஆய்வு நிறுவன செயற்பொறியாளர் தேவராஜ் என்பவர் ஒப்பந்ததாரர் சங்கம் கூறியது உண்மை என்றும், தான் பணியாற்றும் பிரிவிலும் இதுபோன்று நடப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் எந்த வேலைக்கும் பணம் கொடுத்தால் தான் நடக்கும் என்ற நிலைமை இருப்பதாகவும், அதிகபட்சமாக 45 சதவிகிதம் தொகையை கமிஷனாக கொடுக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய பணி நியமனம் முதல், பணி இடமாறுதல் வரை அனைத்திற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரமாக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே நேரடியாக ஈடுபட்டுவுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த லஞ்சம், ஊழல் மூலம் வரும் பணம் யாருடைய கஜானாவை நிரப்புவதற்காக என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் அரசு துறைகளில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை செய்யவேண்டிய காரியத்தை இன்று இந்த சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். அவர்களின் தைரியமான இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இவர்களுக்கு மட்டுமல்லாமல் இதுபோன்று லஞ்ச ஒழிப்புக்கு எதிராக குரல்கொடுக்கும் அனைவருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் துணை நிற்கும். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடைமையாகும். அதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமேயானால் அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துறையின் அமைச்சர் என்கிற முறையிலும், தமிழகத்தின் முதல்வர் என்ற வகையிலும் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பொறுப்பாகும். இயலாத பட்சத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications