வர்தாவால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி நிவாரணம்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக முதல் கட்டமாக ரூ10,000 கோடி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் வட மாவட்டங்களை வர்தா புயல் மிகக் கடுமையாகத் தாக்கி வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 15,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஆயிரக்கணக்கான மின்மாற்றிகள் நாசமாகி உள்ளன. 3,000 மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன.
வர்தா புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர், மின்சாரம், தொலைத் தொடர்பு என அத்தனையுமே முடங்கிப் போயுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டாலும் வர்தா புயலின் கோரத்தாண்டவத்தை முழுமையான சரிசெய்ய நெடுங்காலமாகும் என்பதே யதார்த்தம்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக முதல் கட்டமாக ரூ10,000 கோடி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். தமிழகத்துக்கு உதவி செய்கிறோம் என பேட்டி கொடுப்பதும் நாடாளுமன்றத்தில் அறிவிப்பதும் மட்டுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
கடந்த காலங்களில் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசு கோரிய நிதி உதவியை முழுமையாக மத்திய அரசு வழங்கியதே இல்லை. இம்முறையும் அந்த வஞ்சிக்கும் நிலை தொடரக் கூடாது. தற்போது தமிழக அரசு கேட்டுள்ள ரூ1,000 கோடி முதல் கட்ட நிவாரணத்தை எந்த ஒரு தாமதமுமின்றி மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
தமிழகத்தில் புயல் பாதித்த அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட மத்திய குழுவையும் மத்திய அரசு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.