"கேப்டன்" வழியில் அவரது மனைவியும்.. விஜயகாந்த் பற்றிக் கேட்டால் கன்னத்தில் அறையச் சொல்கிறார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பற்றி யாராவது கேட்டால் கன்னத்தில் ஒரு அறை விடுங்கள் என்று பிரேமலதா தொண்டரிகளிடம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவருமான பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணத்தையடுத்து இரண்டு முறை முதல்வர்கள் மாற்றம், அதிமுக உடைந்தது, சசிகலா, தினகரன் ஜெயிலுக்குப் போனது என ஏகப்பட்ட குழப்பங்கள். இடையில் ஆர்.கே.நகர் கலாட்டா வேறு. டெல்லியில் உச்சமடைந்த விவசாயிகள் போராட்டம் என லைம்லைட் பிரச்னைகள் எதிலுமே பங்கேற்காமல் உடல்நலக்குறைவு காரணமாக ஒதுங்கி இருந்தார் - இருக்கிறார் விஜயகாந்த்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் தேமுதிக சார்பில் மே தின நிழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அவரின் பேச்சு மழையில் நனைய தொண்டர்கள் படையெடுத்திருந்தனர். முதலில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அவரது பேச்சு அனல் தெறித்தது. விஜயகாந்த் பாணியில் அதிரடியாகப் பேசினார். அடிதடியாகவும் பேசினார். அவரது பேச்சிலிருந்து:

உழைக்கும் மக்கள்
உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் ஊர் என்பதாலேயே திருப்பூரை மே தின நிகழ்ச்சிக்கு தேர்வு செய்தோம். தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக சாமளாபுரத்தில் போராடிய வீரம் மிக்க பெண்கள் திருப்பூர். வீதியில் இறங்கிப்போராடும் மக்களைப் பார்க்கும் போது தமிழகம் மாற்றத்தை நோக்கி பயணிப்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

தைரியமில்லாதவர்கள்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றியோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றியோ கேள்வி எழுப்ப தைரியமில்லாதவர்கள் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பற்றி அக்கறைப்படுவது ஏன்.

கன்னத்தில் ஓங்கி அறையுங்கள்
இனி யாராவது கேப்டன் உடல்நிலை எப்படி இருக்கிறது எனக் கேட்டால் அவர்களுக்கு கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுங்கள், ஏனென்றால் நமது கறுப்பு எம்ஜிஆர் 100 சதவீதம் முழு உடல்நலனுடன் இருக்கிறார். அவர் நல்ல ஃபிட்நெஸ்சுடன் சிங்கம் போல மேடையில் அமர்ந்திருப்பதை நீங்களே பாருங்கள் என்று ஆவேசமாக பேசினார் பிரேமலதா

வன்முறைப் பாதை
விஜயகாந்த்துக்கும் அடிதடிக்கும் ஏகப் பொருத்தம். தற்போது கேள்வி கேட்டால் அடியுங்கள் என்று அவரது மனைவியும் சொல்வது தேமுதிக இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக மக்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications