ராமதாஸ்- அன்புமணி பேசணும்! இப்படியே சண்டை கட்டினால் பாமகவுக்கு ஆபத்து! ஜி.கே.மணியின் எச்சரிக்கை மணி

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இருவரும் நேரடியாகப் பேசினால் மட்டுமே கட்சியில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் இணையவில்லை என்றால் பா.ம.க. நலிவடைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

pmk ramadoss anbumani

அவர் மேலும் கூறுகையில், "ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், மாற்றுவதும் இந்தப் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. இரு தலைவர்களும் ஒன்றுசேரவில்லை என்றால், பா.ம.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

கட்சியில் குழப்பம்

மேலும் அவர் பேசுகையில், "கட்சியில் அனைவரும் மிகுந்த குழப்பத்திலும் வேதனையிலும் இருக்கின்றனர். இது மாற வேண்டும் என்றால், கட்சி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கான ஒரே தீர்வு, இரு தலைவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிடுவதுதான். அப்படி ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் பழைய வீறுடன் வளர்ச்சி பெறும். இதுதான் எங்கள் அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

கொறடா விவகாரத்தில் சிக்கல் இல்லை

சட்டமன்றக் கொறடாவை மாற்றுவது தொடர்பாக அன்புமணியும் ராமதாஸும் தனித்தனியே மனு கொடுத்துள்ளதால், கொறடா விவகாரத்தில் பெரிய பிரச்சனை வராது என்று ஜி.கே. மணி தெளிவுபடுத்தினார். "இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து, தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு கூட இல்லை. எனவே, கொறடா விவகாரம் பெரிதாகாது," என்றார் அவர்.

தலைமைப் பிளவு கட்சியின் வளர்ச்சிக்கு எதிரானது

நிர்வாகிகளை மாறி மாறி நியமிப்பது குழப்பத்தையே அதிகரிக்கும் என்றும், வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்றும் ஜி.கே. மணி சுட்டிக் காட்டினார். "45 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிதொட்டி எங்கும் சென்று, சோறு தண்ணீர் பாராமல் இந்த இயக்கத்தை ராமதாஸ் வளர்த்தார். இந்தப் பெரும் சாதனை எளிதாக வந்துவிடவில்லை. ராமதாஸ் இல்லாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை. இன்று பேசப்படும் கட்சியாக பா.ம.க. வளர்ந்திருப்பதற்கு அவர்தான் காரணம். ராமதாஸ் காட்டிய வழியில் அனைவரும் நடக்க வேண்டும்," என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸின் பங்களிப்பை அவர் நினைவுபடுத்தினார்.

அன்புமணியின் முக்கியத்துவம்

அதே நேரத்தில், அன்புமணியின் முக்கியத்துவத்தையும் ஜி.கே. மணி எடுத்துரைத்தார். "அன்புமணியையும் எங்கள் கட்சியில் முன்னிலைப்படுத்தியுள்ளோம். அவர்தான் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர். மத்திய அமைச்சராக இருந்து பல நலத்திட்டங்களைச் செய்ததன் மூலம் பா.ம.க.வை அவர் மேலும் வலிமைப்படுத்தியுள்ளார்," என்று அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.

இரு சக்திகளும் இணைய வேண்டும்

"எனவே, இந்த இரு சக்திகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்கள் இணையவில்லை என்றால், கட்சிக்கு மிகப் பெரிய சோதனை ஏற்படும். இந்த பிளவுக்கு எந்த வெளிக்கட்சியும் காரணமில்லை, இது எங்களுடைய உள் விவகாரம்," என்று கூறி தனது பேச்சை முடித்தார் ஜி.கே. மணி. இந்த கருத்துகள், பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+