உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு பிரேமலதாவின் அதிருப்தியும் திடீர் ஆதரவும்… ஒண்ணுமே புரியலையே?
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று கூறிய தேமுதிகவின் மகளிரணித்தலைவி பிரேமலதா விஜயகாந்த், திடீரென்று வரவேற்பு தெரிவித்து பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் விஜயகாந்தைப் போல பிரேமலதாவும் மாற்றி மாற்றி பேசுகிறாரே தேமுதிகவினரே யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்களின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடத்தப்பட்டதன் மூலம் தமிழகத்தில் சில லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில் மாநாடுக்கு எதிராக எதிர்கட்சிகள் எதிர்ப்புக்குரல் தெரிவிக்காமல் இருப்பதில்லை.
தமிழ்நாட்டில் மின்சாரம், தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை உள் கட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்காமல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேமுதிக வரவேற்பு
அதே நேரத்தில் தேனியில் பேசிய அவரது மனைவி பிரேமலதாவோ சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுக்கு முதலில் வரவேற்பு தெரிவிப்பது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்தான் என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தார். இதுபோன்ற திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

கண்துடைப்பு
இதே பிரேமலதாதான் கோவையில் பேசும் போது, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் கண்துடைப்பு என்று கூறினார். நான்கரை ஆண்டுகாலம் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது மாநாடு நடத்துவது ஏன் என்றும் கேட்டார்.

எல்லாம் நாடகம்தான்
இன்னும் ஆறுமாத காலம்தான் இருக்கிறது. இப்போது வரும் முதலீட்டாளர்கள் எப்போது தொழிலை தொடங்கி அது மக்களுக்கு வேலை வாய்ப்பை எப்படி ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் கூறியுள்ளார் பிரேமலதா.

அது வேற வாய்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒருமாதிரியாகவும், பிரேமலதா கோவையில் ஒரு மாதிரியாகவும், தேனியில் ஒரு மாதிரியாகவும் பேசுவது அக்கட்சியின் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications