தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை.. அட, சென்னையிலும் சின்னத் தூறல்!
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்துள்ளது, பெய்து வருகிறது. வறண்டு போய்க் கிடக்கும் சென்னையிலும் இன்று பல இடங்களில் பலத்த காற்றுடன் சிறிய தூறல் மழை வந்து போனது.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. பெரியகுளம், கம்பம், தேனி உள்பட பல பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது.

ஈரோட்டில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இது போல மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்து உள்ளது.
பெருந்துறை, பவானி, கொடிவேரி, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து உள்ளது
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை அருகே உள்ள நூத்தலாபுரம், எஸ்.தும்மலப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்கின்றனர். தற்போது காய் காய்க்கும் நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் நேற்று திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் 2000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஊத்துப்பட்டியைச் சேர்த்த சின்னம்மாள் உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சின்னாபின்னமானது. சூறாவளியின் தாண்டவத்தால் பல்வேறு இடங்களில் மரங்கள் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் கிராம மக்கள் இருளில் தவித்தனர்.
சென்னையில் சின்னத் தூறல்
சென்னையில் இன்று சின்னதாக ஒரு தூறல் வந்து விட்டுப் போனது. அதற்கு முன்னதாக பலத்த காற்றும் வீசியது. புறநகர்ப் பகுதிகள் பலவற்றை இந்த தூறல் மழை போக்கு காட்டிச் சென்றது. இதனால் புழுக்கம்தான் அதிகரித்துள்ளதே தவிர குளுமையைக் காணவில்லை.












Click it and Unblock the Notifications