தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை... கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்
தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோபுரம் பிலிம்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
வட்டிக்கு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் கோபுரம் பிலிம் நிறுவனத்தை சேர்ந்த அன்புச் செழியன் என்பவர்தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் அவரது தற்கொலை கடிதத்திற்கு மறுப்பாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோபுரம் பிலிம்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
அவர் எழுதியதுதானா
அவர்களுடைய கடிதத்தின் படி "செய்தித்தாள்களில் திரு. அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு, தற்கொலை கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் உண்மையில் அவர் எழுதி வைத்தது தானா.?" என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை
மேலும் அந்த கடிதத்தில் ''அசோக்குமார் சசிகுமாரின் உறவினர். நாங்கள் அசோக்குமாருக்கு எந்தவிதமான பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் மட்டுமே எங்களிடம் பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் அசோக்குமார் எங்களை பற்றி கடிதத்தில் எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறப்படுவது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
சொகுசான வாழ்க்கை
அவர்கள் தங்கள் கடிதத்தில் "நாங்கள் படம் எடுக்க உதவி செய்வதற்காக பணம் கொடுக்கிறோம். எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் நாங்கள் பணம் கொடுக்கிறோம். ஆனால் பணம் வாங்கியவர்கள் படம் எடுக்காமல் கார், வீடு என செட்டில் ஆகிவிடுகிறார்கள். உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்தி மோசடி செய்யவேண்டும் என ஒரு கும்பல் சுற்றுகிறது'' என்று கூறியுள்ளனர்.
உண்மை இல்லை
மேலும் அவர்கள் அந்த கடிதத்தில் "நாங்கள் கடந்த 20 வருடமாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கள் மீது எந்த புகாரும் இல்லை. அசோக்குமார் என்பவர் எழுதியதாக கூறப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன்முலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று எழுதி இருக்கின்றனர்.