ஜனாதிபதி தேர்தல்: மாத்தி நடந்தா ஆரும் அன்னந்தண்ணி கூட.. நாட்டாமை உத்தரவில் நடுங்கிய எம்எல்ஏக்கள்!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோட்டையில் நாட்டாமை கூட்டிய 'சுவாரசிய' பஞ்சாயத்து இது.
சென்னை: ஜனாதிபதி தேர்தல் நாளில் கோட்டையே களைகட்டியது. காலையிலேயே 'நாட்டமை' முதல் பேட்டியை கொடுத்து உற்சாகமாக வலம் வந்தது பலருக்கும் ஆச்சரியம்தான்.
'நாட்டாமை'க்கு வேட்டு வைப்பதற்காக ஓட்டை மாற்றிப் போடுவாங்களோ என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் எந்த ஒரு கவலையுமே இல்லாமல் நாட்டாமை வலம் வந்தார்.
இதற்கு காரணமே தேர்தலுக்கு முன்பாக நாட்டைமை கூட்டிய பஞ்சாயத்துதான். ஜமீன்தாருக்கு கொடுத்த உத்தரவாதத்தை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றியாகவும் என்பதுதான் நாட்டாமையின் சிந்தனையாக இருந்தது.
இதற்காக அந்த பஞ்சாயத்தை கூட்டினாராம் நாட்டாமை. வழக்கம்போல சில மல்லுவேட்டி மைனர்கள் எகத்தாளமாகத்தான் பஞ்சாயத்துக்கு வந்திருந்தார்.
தொடக்கத்தில் மென்மையான குரலில் பேசிய நாட்டமை பின்னர் கறார் குரலில், எனக்கு தெரியாம எதுவும் நடக்காதுங்க.. யாராச்சும் மாத்தி நடந்தீங்கன்னு தெரிஞ்சா அப்புறம் யாரும் உங்க கூட அன்னந்தன்னி புழங்கமாட்டாங்க... ஒத்த ரூவா கூட கிடைக்காது என கட்டளை பிறப்பித்திருக்கிறார்.
நாட்டாமையை எதுக்கு பகைச்சுக்கனும் என்கிற ரீதியில் மல்லுவேட்டிகள் கூட பவ்யம் காட்டிய உற்சாகத்தில்தான் ஜனாதிபதி தேர்தல் நாளில் கலகலவென நடமாடினாராம்.