இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள்- அரசும் இணைந்து நாடகம்: ராமதாஸ்
சென்னை: மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு ரூபாய் 4 கோடியை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது அரசும், பள்ளிகளும் ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் வழங்கப் போவதில்லை என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இலவசக் கல்வி வழங்கியதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை வழங்காததால் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் 2010 ஆம் ஆண்டிலிருந்து தான் அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஓர் ஆண்டு கூட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
வரும் 2014 மற்றும் 20 15 ஆம் ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் கடந்த 2 ஆம் தேதி தொடங்கின. ஆனால், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசோ அல்லது தனியார் பள்ளிகளோ தொடங்கவில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதை கடந்த 2 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் கடுமையாக கண்டித்திருந்தேன்.
ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தனியார் பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்பது போல தோன்றுகிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம், கல்விக் கட்டண நிர்ணய நடைமுறை ஆகியவற்றை தனியார் பள்ளிகள் பெயரளவுக்குக் கூட மதிப்பதில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தாலும் இதைத் தடுக்கவோ அல்லது தவறு செய்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முன்வரவில்லை. மாறாக, தமிழக அரசுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆட்சியாளர்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிதல் தான் என்பதை யூகிக்க முடிகிறது.
இதனால் அரசாங்கமானது தனியார் பள்ளிகள் மீது கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, அவை அனைத்தும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதும், மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறு ஒற்றைச் சாளர முறையில் 25 சதவீத விழுக்காடு இடங்களுக்கான மாணவர்களை அரசே தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும் தான் ஏழை மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்க வகை செய்யும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications