நடுவீதியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி... காரைக்குடியில்!
காரைக்குடி: மேலதிகாரி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் நடுவீதியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள ஆவின் நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக மேலாளராக பணி புரிந்து வருபவர் கதிரேசன். இவரிடம் ஆவின் பொதுமேலாளர் தங்கராஜ் என்பவர் பால் முகவர்களிடம் லஞ்சம் வாங்கித்தரச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், தற்காலிக பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கதிரேசன் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் முன்னிலையில், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் அங்கிருந்த வெளியேறிய கதிரேசன், கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சாலையிலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதிரேசனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கனவே, மேலதிகாரிகளின் நெருக்கடியால் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு நிலவி வரும் வேளையில், காரைக்குடியில் அரசு அதிகாரி ஒருவர் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications