விஜய்யை விடுங்க.. மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்று ‘ட்ரீட்’ வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை!
திருச்சி: பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி வருகிறார் நடிகர் விஜய். இதே நேரத்தில், தேசிய திறனறி தேர்வில் வென்ற மாணவிக்கு, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை கொடுத்த பரிசு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ளது வானவநல்லூர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மொத்தம் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் சார்பில் தேசிய திறனறி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வை ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் எழுதினர். இந்த தேர்வு மையத்தில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 8 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன் என ஏற்கனவே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா தெரிவித்து, மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தியிருந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் ஆசிரியர்களும் பயிற்சி அளித்துள்ளனர்.
இந்நிலையில் திறனறி தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் வானவநல்லூர் அரசுப் பள்ளி மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை அமுதா கூறியபடி, மாணவி மிருணாளினி விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அதன்படி கடந்த புதன்கிழமை, மாணவி மிருணாளினியை திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார் தலைமை ஆசிரியை அமுதா. அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு சென்றனர். மாணவி மிருணாளினி மகிழ்ச்சியுடன் விமானத்தில் பயணம் செய்தார்.
தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை விமானத்தில் பயணிக்க வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மற்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துவதாகவும் தலைமை ஆசிரியையின் செயல் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications