ஆளுநரை சந்தித்த முதல்வர், துணை முதல்வர்... காவிரி விவகாரம் குறித்த ஆலோசனை என தகவல்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
காவிரி வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே வரும் மே 3-ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறைமன்ற நடுவராக சோ.அய்யர் மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனி அறையில் சந்தித்து பேசினர்.
இதுபோன்ற பதவியேற்பு விழாவுக்கு பின்னர் மரியாதை நிமித்தமாக ஆளுநரை முதல்வர் சந்திப்பது வழக்கமான ஒன்று என்று கூறப்பட்டாலும் காவிரி விவகாரத்தில் அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆளுநர் தனி அக்கறை காட்டுவதாலும் வரும் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனு விசாரணை வருவதாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.