நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கவர்னர் மேலும் 2 வார கால அவகாசம்!
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யமேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியர் நிர்மலா தேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள கல்லூரி மாணவிகளுக்கு வலை விரித்தார்.
இதை செல்போனில் அவர் பேசிய ஆதாரத்துடன் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி கூறியதன் பேரில் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மே 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார்.
இந்நிலையில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும் அவர்கள் கூறும் தகவலின் படி வேறு யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்பதாலும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு சந்தானம் ஆளுநரிடம் கேட்டார்.
அதனடிப்படையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்களுக்கு கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.