புதுச்சேரியில் முதல்வர்- ஆளுநர் இடையே மோதல் வலுக்கிறது.. நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த கிரண் பேடி
அதிகாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவிப்பதை தடைசெய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக ரத்து செய்துள்ளார். இதன்
புதுச்சேரி : அதிகாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவிப்பதை தடைசெய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக ரத்து செய்துள்ளார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் பிரச்னைகள், அரசு திட்டங்களை வேகமாக செயல்படுத்தும் வகையில் அனைத்து அரசு அதிகாரிகள் இடம் பெற்றிருந்த வாட்ஸ் அப் குரூப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் குரூப்பில் இடம்பெற்றிருந்த சிவக்குமார் என்ற அதிகாரி ஆபாசப்படம் பதிவிட்டதாக பிரச்சனை எழுந்தது.

இதையடுத்து அவரை ஆளுநர் கிரண் பேடி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அனைத்து அதிகாரிகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அரசு பணியாளர் நலத்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மத்திய அரசின் ஆணையின்படி அரசு அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் இதனால் அரசு ரகசியங்கள் வெளிநாடுகளுக்கு கசியும் வாய்ப்புள்ளது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உத்தரவை ஆளுநர் கிரண்பேடி இன்று ரத்து செய்துள்ளார். மேலும் புதுவை அரசு பணியாளர் நலத்துறையின் உத்தரவு தற்போது பின்பற்றப்படும், வழிகாட்டுதல்கள், விதிகள், கொள்கைகளுக்கு முரணாக உள்ளதால் அது செல்லாது என அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரண் பேடி புதுச்சேரி மாநிலம் முன்னேற நவீன தொழில்நுட்பம் அவசியம் என கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications