தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கோவை: ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து நடைபெறும் கலவரங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆளுநர் தலையிட வேண்டும் என்று பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கடந்த ஆண்டில் பாமக போராட்டம் நடத்தாமலே எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். ராமதாசை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 140 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று அ.தி.மு.க.வினர் எங்கு பார்த்தாலும் அனுமதியின்றி போராட்டம் செய்து வருகிறார்கள். பஸ்கள் கொளுத்தப்பட்டு உள்ளன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக 2 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று மட்டும் 45 இடங்களில் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. எனவே கவர்னர் நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தரக்குறைவாக பேசுவது சட்டத்தை அவமதிப்பு செய்வது ஆகும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். எனவே ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஆளும் கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம்.
ஆனால் அதை செய்யாமல் வீதிகளில் இறங்கி போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று பஸ் உரிமையாளர்களை மிரட்டி, தனியார் பஸ்களை ஓடாமல் செய்து உள்ளனர். அதுபோன்று பள்ளிக்கூட நிர்வாகிகளையும் மிரட்டி பள்ளிக்கூடங்களையும் திறக்க விடாமல் செய்ய உள்ளனர். எனவே இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications