அப்பாடா சென்னை வந்துவிட்டார் ஆளுநர்... அடுத்தது அரசியல் அதகளம்தானா?
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, என இரண்டாக உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21ம் தேதி ஒன்றாக இணைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக குறைந்தது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கின.

ஆளுநருக்கு மனு
மேலும், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் ஆளுநர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஆளுநருக்கு ஸ்டாலின் கெடு
இந்த நிலையில் கடந்த 10ம் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஒரு வார காலத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தார்.

மும்பை கிளம்பினார்
வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்த மறுநாளே ஆளுநர் மும்பை புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஸ்டாலின்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும், என்று ஹைகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை
வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில் தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரபரப்பு
இந்த நிலையில் மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகளை நடத்தினர்.
இன்று காலை அவர் மீண்டும் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினரா். இதையடுத்து ஆளுநர் இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications