குமரியில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து... அச்சத்தில் அலறிய பயணிகள்
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே அரசு பேருந்தின் டயர் திடீரென்று வெடித்த காரணத்தால் பயணிகள் அச்சத்தில் அலறினர். தாறுமாறாக பேருந்து ஓடியும் தடுமாறாத டிரைவர், சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. காலை நேரம் என்பதால் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து புறப்பட்டு தக்கலை அருகே வந்தபோது பேருந்தின் பின்பக்க டயரில் இருந்து பலத்த சத்தம் கேட்டது.
இது பற்றி பேருந்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் டிரைவரிடம் தெரிவித்தனர். அதற்குள் பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு திருப்பத்தில் பேருந்தில் திரும்பியபோது மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. உடனே பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளும், பெண்களும் பயத்தில் அலறினர். அதற்குள் நிலைமையை உணர்ந்த டிரைவர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தினார். பேருந்து நின்றதும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். உடனடியாக டிரைவரும், நடத்துனரும் கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க டயரை பார்த்தபோது அது வெடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் இதுபற்றி போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேற்கொண்டு பேருந்தை ஓட்ட முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் நாகர்கோவில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக பேருந்தில் வந்த பயணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் அவதிக்கு ஆளானார்கள். தமிழக அரசு பேருந்துகள் பெரும்பாலும் இரும்புச்சாமனுக்கு பேரிச்சப்பழம் போட்டு வாங்கும் நிலையில்தான் இருக்கிறது என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications