ஈரோடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி
ஈரோட்டிலிருந்து திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டதால், பெரும் சிரமத்திற்குள்ளாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம். இவர்களின் வசதிக்காக ஈரோட்டில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்தின் சார்பில் திருச்செந்தூருக்கு காலை 9 மணிக்கு ஒரு பேருந்தும் இரவில் 7.40 மணிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தும் இரண்டு பேருத்துகள் இயக்கப்பட்டன.

கடந்த 22 ம்தேதி தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தினை தொடர்ந்து இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்னரும் திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பவில்லை என்பது பொதுமக்களின் புகார்.
தற்போது திருச்செந்தூர் செல்பவர்கள் மதுரைக்கு சென்று அங்கிருந்து வேறு பேருந்தில் செல்லவேண்டியுள்ளது. குடும்பத்தினருடன் செல்லும் தங்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திருச்செந்தூர் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று இயக்கப்படுவதாகவும் இந்த பேருந்துவுக்கு ஆதரவாகத்தான் அரசு பேருந்துகளை நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications