சீன பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
சென்னை: சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. அதை சுற்றியிலுள்ள பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. நேரடி மற்றும் மறைமுகமாக பட்டாசு தொழிலால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும், பயனும் கிடைத்துவருகிறது.
ஆனால், சீனாவில் இருந்து குறைந்தவிலையில் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வரும் பட்டாசுகளால் சிவகாசி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த தீபாவளி சீசனின்போது வடமாநிலங்களில் கன மழை, முகூர்த்த தினங்கள் குறைவு போன்றவற்றால் பட்டாசு தேவை குறைந்திருந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த தீபாவளியின்போது எதிர்பார்த்த விற்பனை இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் ஆலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த ஆண்டிலும், தீபாவளிக்கு ஒன்றரை மாதமே உள்ள நிலையில் தீபாவளிக்கு முந்தைய ஆர்டர்கள் போதிய அளவில் இல்லை. அனைத்து ஆலைகளிலும் குடோன்களில் பட்டாசு தேங்கியுள்ளதால் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
வட மாநிலங்களில் சீன பட்டாசு தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், வியாபாரிகள் ஆர்டரை பெருமளவில் குறைத்து விட்டனர். இதனால் இந்த ஆண்டும் பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் "சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்வோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். எனவே, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் அச்சப்பட வேண்டாம். மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்ட கோஷத்தை முன்னெடுத்துவருகிறது. இந்நிலையில், நமது நாட்டு உற்பத்தியாளர் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது" என்றார்.