சபாஷ்... மருத்துவப் படிப்பிற்கு தேர்வு பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!
காரைக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேரத் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
2016-2017 ம் கல்வி ஆண்டில் சென்னை மருத்துவ கல்லுரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி போன்ற பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒரு அரசுப் பள்ளி மாணவி பல் மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயில மூன்று அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் பயின்று மருத்துவ மற்றும் பொறியியல் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அவர்கள் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று சிகரம் தொட்ட சாதனை மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி. கலைச்செல்வி, ஜாக்குலின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சாதனை மாணவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சாதனை மாணவன் செல்வன் செல்வபாண்டி அவர்களுக்கு தேவகோட்டை தே பிரித்தோ பள்ளி நண்பர்கள் குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், .பீட்டர்ராஜா மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோர் குழுவின் சார்பாக நிதி உதவி அளித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து அம்மாணவனின் கல்விக்கான செலவுகளுக்கு தமது குழு மூலம் உதவி செய்வதாக உறுதியளித்தனர். இவ்விழாவில் மாணவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஆறுமுகம் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியர் கோமதி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications