3 போலீசாரை நீக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை... அடிவாங்கிய ஆட்டோ டிரைவர் ராஜா
செங்கம்: தமது குடும்பத்தினரைத் தாக்கிய 3 செங்கம் போலீசாரை பணியில் இருந்து நீக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று செங்கம் ஆட்டோ டிரைவர் ராஜா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா, அவருடைய மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோரை போலீசார் திங்கள்கிழமையன்று நடுவீதியில் நிறுத்தி கொடூரமாகத் தாக்கினர்.

ராஜாவும் அவரது குடும்பத்தினரும் நகை வாங்குவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போதுதான் போலீசார் தேவையில்லாமல் தலையிட்டு கொடூரமாகத் தாக்கினர் .இந்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் விஜயகுமார், நம்மாழ்வார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் 3 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ராஜா, போலீசார் எங்களை நடு ரோட்டில் தாக்கியது மட்டு மல்லாமல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அங்கு வைத்தும் அடித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களை விசாரித்து அனுப்பினார்.
போலீசார் அடித்த வலிதாங்காமல் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றோம். அங்கு வந்த போலீசார் மறுபடியும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடாது என்றும், தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதை அடுத்து எங்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொதுமக்களின் முற்றுகை, சாலை மறியல் காரணமாக 3 போலீசாரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். எங்களை கண்மூடித்தனமாக தாக்கிய 3 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications