ஹலோ நடமாடும் நெல் கொள்முதல் நிலையமா, 300 மூட்டை ரெடியா இருக்கு வாங்கிட்டு போங்க சார்!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் விவசாயிகளிடம் 300 மூட்டைகளுக்கு மேல் நெல் இருந்தால் நேரடியாக அவர்களது இடத்திற்கே சென்று கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2015 காரிப்பருவ நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டு நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்ததற்கான தொகையை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், "நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நல்ல நிலையில் உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்து கொள்முதல் பணிகளை முடிக்க வேண்டும்.
எந்த நேரத்திலும் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் நெல்லுக்குரிய தொகையினை வழங்கி அவர்களை காத்திருக்க வைக்காமல் அனுப்பி வைக்க வேண்டும். நடப்பாண்டு சம்பா சாகுபடி 1 லட்சத்து 2 ஆயிரத்து 336 எக்டேர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் முதற்கட்டமாக நாகை மாவட்டத்தில் மொத்தம் 50 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,470 ஆம், பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,410 ஆம் அரசு நிர்ணயித்துள்ளது.
விவசாயிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
மேலும், 300 மூட்டைகள் ஒரே இடத்தில் இருந்தால் நேரடியாக அந்த இடத்திற்கே வாகனத்தை கொண்டு சென்று நெல் கொள்முதல் செய்யும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications