பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ்... வாக்குப்பதிவு எந்திரங்களில் விவிபிஏடி.. கலக்கும் தேர்தல் ஆணையம்!
நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இம்முறை பல அதிரடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, பறக்கும் படையினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் வசதியும், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் விவிபிஏடி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கென பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது.

பறக்கும் படை...
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், பரிசு பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்கவும் தாசில்தார், பிடிஓ, போலீஸ் அதிகாரிகள், வீடியோகிராபர் உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும்படை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் வசதி...
இந்த பறக்கும் படையினர் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு விடாமல் தடுக்க, தேர்தல் ஆணையம் அனைத்து பறக்கும் படையினரின் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு....
இந்த பறக்கும் படையினரின் வாகனங்களை ஜிபிஎஸ் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் பிரிவு, தமிழக தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தொகுதி மாறி சென்றால் அது குறித்த தகவலை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பிரிவுக்கு குறுந்தகவல் மூலம் தெரிய வரும். இதன் மூலம் பறக்கும் படையினரின் செயல்பாடுகளை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், தேர்தல் ஆணையத்தில் இருந்தும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

30 பறக்கும் படைகள்...
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஓவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 10 தொகுதிகளுக்கும் .30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவிபிஏடி...
இதேபோல், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் விவிபிஏடி முறை (வோட்டர் வேரிபிட் பேப்பர் ஆடிட் டிரில்) தமிழக சட்டசபைத் தேர்தலில் சில முக்கிய தொகுதியில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

புதிய வசதி...
இந்தப் புதிய வாக்கு பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியலாம். இதற்கென புதிய வாக்கு பதிவு இயந்திரங்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.

டம்மி வாக்குப்பதிவு....
பெங்களூருவில் இருந்து வந்துள்ள பெல் நிறுவன இன்ஜினியர்கள் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்து தயார் செய்து வருகின்றனர். சில இடங்களில் மாதிரி வாக்கு பதிவு இயந்திரத்தில் பல்வேறு கட்சியினர் முன்னிலையில் டம்மி வாக்கு பதிவு நடத்தி பார்க்கப்பட்டது.

386 எந்திரங்கள்...
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளிலும் இந்த புதிய இயந்திரம் மூலம் வாக்கு பதிவு நடத்தப்படுகிறது. நெல்லை தொகுதியில் வாக்கு பதிவுக்கு 386 விவிபிஏடி எந்திரங்கள் வந்துள்ளன.

துண்டு சீட்டு ஆதாரம்...
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம், வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்வதற்கான பட்டனை அழுத்தும் போது அவர் ஓட்டு போட்ட சின்னம் பிரிண்டரில் வெளிவரும் பேப்பரில் தெரியும். அந்த துண்டு சீட்டு தானாகவே சீலிடப்பட்ட பெட்டியில் விழுந்து விடும்.

அதிரடி...
இந்த துண்டுசீட்டை வாக்காளர் பார்க்கலாமே தவிர வெளியே எடுத்த செல்ல அனுமதி இல்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வசதியால் ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அதிரடி செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications