கிரானைட் முறைகேடு விசாரணை: சகாயத்திற்கு மேலும் 6 வாரம் அவகாசம்
சென்னை: கிரானைட் முறைகேடு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சகாயம் குழுவுக்கு மேலும் 6 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சகாயம் குழுவின் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு அவகாசம் வழங்கியுள்ளது.
மதுரை அருகே உள்ள குவாரிகளில் நடந்த கிரானைட் முறைகேடு பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் 16 கட்ட விசாரணைகள் நடத்தியுள்ளார் சகாயம்.
16 கட்ட விசாரணைகள்
கடந்த 1ம்தேதி முதல் 17ம் தேதி வரை சகாயம், 16வது கட்ட விசாரணையை நடத்தினார். இந்த விசாரணையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், கனிம வளத்துறை செயலாளர் சங்கர், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் சகாயம் நோட்டீசுக்கு அதிகாரிகள் மூலம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
நேரில் வாக்கு மூலம்
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, கோட்டாட்சியர் செந்தில் குமாரி, கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார், டாமின் அதிகாரிகள், அரசு வக்கீல்கள், பொதுப்பணித்துறையின் 5 உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் சகாயம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர்.
அன்சுல் மிஸ்ரா
கடந்த 2012 இல் மதுரை மாவட்ட ஆட்சியராக அன்சுல் மிஸ்ரா இருந்தபோது, கிரானைட் குவாரிகளின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரையின்பேரில், விதிமீறி செயல்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்த சில விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு முந்தைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சகாயம்.
அறிக்கை தயாரிக்க தாமதம்
தற்போது சென்னையில் வணிக வரித்துறையில் பணியாற்றி வரும் அன்சுல் மிஸ்ரா, சகாயம் கேட்டிருந்த தகவல்களை தனது சார்பில் வணிக வரி அலுவலர் ஒருவரிடம் அனுப்பியிருந்தார். சீலிட்ட உறையில் இருந்த அந்த கடிதம் புதன்கிழமை அளிக்கப்பட்டது. இதனால் இறுதி கட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15க்கு ஒத்திவைப்பு
அதோடு மதுரை மாவட்டச் சேர்ந்த பல்வேறு அரசுத் துறைகள் மொத்தம் 6,687 பக்க அறிக்கைகள் அளித்துள்ளன. இந்த அறிக்கையை ஆராய அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று மதுரை நீதிமன்றம் ஆகஸ்ட் 15க்கு ஒத்திவைத்தது.