கிரானைட் முறைகேடு – மதுரை பிரபல தொழிலதிபர் சோலைராஜன் மீது வழக்கு!
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த சாட்டையை சகாயம் சுழற்றத்துவங்கி இருக்கும் நிலையில் கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.
மதுரை, மேலூரில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக 4 பேர் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜா என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஓய்வு பெற்ற தாசில்தார் வெங்கடசுப்பு, மகன்கள் முரளி, மோகன் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், ராஜாவின் புகாரின் அடிப்படையில் மதுரையின் பிரபல தொழிலதிபரான சோலைராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வழக்கின் மனுதாரரான ராஜா, கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுவதால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக இவர்கள் நான்கு பேர் மீதும் புகார் அளித்திருந்தார்.