கிரானைட் முறைகேடு: டாமின் அதிகாரிகளுக்கு சகாயம் எச்சரிக்கை- வனத்துறைக்கும் நோட்டீஸ்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து 12ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், காடுகள், உயிரினங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தருமாறு வனத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து ஏற்கெனவே 11 கட்ட விசாரணையை முடித்திருக்கும் சகாயம், நேற்று 12ஆம் கட்ட விசாரணையைத் தொடங்கினார்.
ஆய்வுக்குழு அலுவலர்கள் ஆல்பர்ட், ஜெய்சிங் ஞானதுரை, ராஜாராம், கீர்த்தி பிரியதர்ஷினி, ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இறுதி அறிக்கை தயாரிப்பு குறித்து நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
குற்றச்சாட்டு வாரியாக பெற வேண்டிய வாக்குமூலம், இணைக்க வேண்டிய ஆவணங்களை விரைவாக தயார் செய்து இறுதி அறிக்கை பணியை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என சகாயம் கேட்டுக்கொண்டார்.
நேற்றைய தினம் துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்றது.