இறுதிக் கட்டத்தில் கிரானைட் முறைகேடு விசாரணை: அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் தீவிரம்
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது இறுதி கட்ட விசாரணையை இன்று தொடங்குகிறார். மே 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு கிரானைட் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறார். அவரது குழுவின் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மே 12 வரை அவகாசம்
கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மே 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்காக அறிக்கை தயாரிக்கும் பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

குவிந்துள்ள கோப்புகள்
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி பெற்ற கோப்புகள் சகாயம் அலுவலகத்தில் மலைபோல் குவிந்துள்ளன. இவற்றை சகாயம் கடந்த வாரத்தில் ஆய்வு செய்தார். நள்ளிரவு 12 மணி வரை அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்து அறிக்கை தயாரித்துள்ளாராம்.

இரவு பகலாக ஆய்வு
அரசு துறைகள் வழங்கிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் ஏடிஎஸ்பி, உதவி இயக்குநர்களை கொண்டு ஆய்வு செய்யும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

அதிகாரிகள் பதில்
தமிழக அரசின் சில துறை அதிகாரிகள் அளித்துள்ள பதில் சகாயத்துக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு
இதனிடையே, விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கி, அறிக்கை தயாரிப்பு நடைபெற்று வருவதால் சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்துக்குள் வெளியாட்கள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர்.

பெறப்பட்ட வாக்குமூலம்
கிரானைட் குவாரியின் முறைகேடு தொடர்பாக அரசு நிலம் ஆக்கிரமிப்பு, கண்மாய், வரத்து கால்வாய், ஊரணி, தொல்லியல்துறையின் புராதான சின்னங்கள் அழிப்பு, வேளாண் உற்பத்தி பாதிப்பு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் அழிந்தது, இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மூலம் பெற்று அதற்கான அதிகாரிகளை நேரில் வரவழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.

கணக்கு எவ்வளவு
கிரானைட் குவாரியில் எத்தனை கியூபிக் மீட்டர் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. அதை மீறி எத்தனை கியூபிக் மீட்டர் வெட்டி எடுத்தனர் எனவும் கணக்கிட்டுள்ளார்.கடந்த 5 மாதத்தில் சகாயம் இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பாதிப்பு எவ்வளவு
கிரானைட் குவாரியால் அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா என்பதே நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை. ஆனால் அதைவிட கூடுதலாக கிரானைட் குவாரியால் எந்தவகையான இயற்கை வளம் பாதிப்பு மற்றும் அழிக்கப்பட்டது, அதில் அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதையும் சகாயம் அறிக்கையில் தெரிவிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் சகாயம் தனது 13வது கட்ட ஆய்வு பணியை இன்று துவக்க உள்ளார். இதன்பின்னர் மே 12 ஆம் சகாயம் தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications