காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறவில்லை என்கிறது உச்சநீதிமன்றம்.. அடுத்து என்ன நடக்கும்?
Recommended Video
சென்னை: ஸ்கீம் என்ற வார்த்தையின் அர்த்தம், காவிரி மேலாண்மை வாரியம் என்பது கிடையாது என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற த்தின் இந்த கருத்தின மூலம், தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி தொடர்பான தங்கள் உத்தரவை செயல்படுத்த ஒரு திட்டத்தை வகுக்குமாறு கூறியிருந்தது.
திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்பது தமிழக அரசின் விளக்கமாக இருந்து வந்தது.
விளக்கம் அளிப்பு
ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று அளித்த விளக்கத்தில் ஸ்கீம் என்று தாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்து கிடையாது என தெரிவித்துள்ளது. தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டம் அமைக்க வேண்டும் என்பதே தங்கள் கருத்து என கூறியுள்ளது. இதன் மூலம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிடலாம்.
3 மாதம் அவகாசம்
மத்திய அரசு காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதிலும் கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவகாசம் கேட்பதாக குறிப்பிடவில்லை. ஆனால் தமிழக அரசுதான் இதுவரை, உச்சநீதிமன்றம் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் பற்றிதான் என திரும்ப திரும்ப கூறி வந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லை
உச்சநீதிமன்றம் இன்று, தனது தீர்ப்பு பற்றி விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், இனிமேல், காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்பது உறுதியாகிவிட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது உரிய முறையில் வாதத்தை முன் வைக்காததன் விளைவுதான், உச்சநீதிமன்றம் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பிக்க காரணம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அதிகாரம் இல்லாத குழு
உச்சநீதிமன்ற விளக்கத்தால் அதிகம் மகிழ்ச்சியடைந்துள்ளது மத்திய அரசுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக மக்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்து தாங்கள் தப்பிவிட்டதாக பாஜக அரசு மகிழ்ந்திருக்கலாம். அதேநேரம், உச்சநீதிமன்றம் கூறியதற்காக, ஒப்புக்கு சப்பாக, மத்திய அரசு காவிரி கண்காணிப்புகுழு என்ற பெயரில் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்கலாம். இப்படி குழு அமைத்தால், தண்ணீர் வரத்தை கணக்கீடுதான் செய்ய முடியுமே தவிர, அந்த குழுவால் தண்ணீரை திறந்துவிட முடியாது.
கர்நாடகா கருணை காட்ட வேண்டும்
காவிரி நீரை திறக்க வேண்டுமா, இல்லையா என்பதை வழக்கம்போல கர்நாடக அரசுதான் முடிவு செய்யும் நிலை உருவாகும். கர்நாடகாவிலுள்ள அணைகளின் கட்டுப்பாடு அந்த அரசின்கீழ்தான் தொடரும். இதெல்லாம், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாகதான் அமையும். 15 வருடங்களுக்கு காகவிரி தொடர்பாக வழக்கு தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதால், கர்நாடக அரசு தண்ணீர் தராவிட்டாலும் அதை எதிர்த்து தமிழகத்தால் நீதிமன்றம் செல்ல முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.