நியூட்ரினோவுக்கு சூழல் அனுமதி: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
சென்னை: நியூட்ரினோ ஆய்வகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் உள்ள போடி மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வதற்காக 2 கிலோ மீட்டர் நீள சுரங்கம் தோண்டப்பட்டு பூமிக்கு அடியில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வகம் அமைப்பதற்காக சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 01.06.2011-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவில் குறிப்பிட்டதைப் போன்று இது தொடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.
கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் ஆய்வு மையம் சார்பில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும், அது செயல்படத் தொடங்கியதும் பாதிப்பு இருக்காது என அந்த மையத்தின் விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வகத்துக்காக 6 லட்சம் டன் எடையுள்ள பாறைகள் வெட்டி எடுக்கப்பட உள்ளன. இவ்வளவு பெரிய அளவில் பாறைகளை வெட்டி எடுப்பதன் மூலம் ஆறுகள், நீர்வளம், அணைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே, இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு முழுமையானதாக இல்லை.
இந்த ஆய்வகத்துக்காக அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் பூமிக்கு அடியில் நீரோட்டம் பாதிக்கப்பட்டு நீர்வளம் பாதிக்கப்படலாம். இந்த ஆய்வகத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை என 12 அணைகள் உள்ளன. இந்த ஆய்வகத்தால் அணைகளுக்கு நீர்வரத்து பாதிக்குமா, அணைகள் பாதிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த அனுமதியை வழங்கும்போது முழு மனதையும் செலுத்தவில்லை. எனவே, இந்த அனுமதியை சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி எஸ்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications