தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னை: தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ஓராண்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது பெரும் தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் எனத் தெரிகின்றது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி உட்பட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக, நீர்வள ஆதார விவர குறிப்பு மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது. அது புள்ளிவிவரங்க ளாக தொகுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத் தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2013, மே மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, கோயமுத்தூர், திண்டுக்கல், திருச்சி உட்பட 21 மாவட் டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி, கரூர், கடலூர், நீலகிரி உட்பட 11 மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.