புனேவில் தப்பி ஓடிய திருச்சி தவமணி – தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
திருச்சி: புனேவில் தப்பி ஓடிய குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கு கைதி தவமணி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தவமணி. இவர் கடலூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும் மகராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த ஒரு கொலை வழக்கும், குரூப்-2 வினாத்தாள் அச்சடித்து ஈரோட்டில் வெளியிட்டு பல கோடி சம்பாதித்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் புனேயில் உள்ள வழக்கு தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி மீண்டும் திருச்சிக்கு தவமணியை போலீசார் அழைத்து வந்த போது பெங்களூரில் அவர் தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
இதையடுத்து தவமணி பாதுகாப்புக்கு சென்ற திருச்சி போலீசார் 5 பேர், சிறை காவலர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். கைதி தவமணி தப்பி ஓடி 40 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் உள்ளது.
இதையடுத்து தவமணி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை தேடப்படும் குற்றவாளியாக திருச்சி மாநகர போலீசார் அறிவித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். மேலும் துண்டு பிரசுரம் அச்சடித்தும் பொதுமக்களிடம் வினியோகித்து வருகிறார்கள்.