ஜிஎஸ்டி வரிவிதிப்பால் உயரும் பொருட்களின் விலை... விழிபிதுங்கும் இல்லத்தரசிகள்!
ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி அனைத்துப் பொருட்களின் விலைகளும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாத செலவை எப்படி கையாள்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் திணறி வருகின்றனர்.
சென்னை: ஆண்டு வருமானம் 20 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ள நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். ஆனால் சில ஆயிரங்கள் வருமானம் கொண்ட கடைகள் கூட ஜிஎஸ்டி என்று பொருளின் விலையை ஏற்றி விற்பதால், இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்க அல்லாடுகின்றனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஒரே வரி என ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி 18-28 சதவீதம் வரை விதிக்கப்படுவதால் பட்டாசு, ஜவுளித்துறை, சினிமா உள்பட பல துறைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்தத் துறையை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிறு மளிகை கடைகள், வீட்டு தண்ணீர் சப்ளை செய்பவர்கள் என அவர்களும் ஜிஎஸ்டியை காரணம் காட்டி பொருட்களின் விலையை தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக்கொண்டு உள்ளனர். இந்த எதிர்பாராத விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த இல்லத்தரசிகள் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தண்ணீர்...தண்ணீர்
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான நடுத்தர மக்கள் குடிதண்ணீருக்கு, தனியார் நிறுவனங்களின் 'கேன்' தண்ணீரைத்தான் நம்பியுள்ளார்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முன்பு வரை 30 ரூபாய் வரை விற்கப்பட்ட கேன் தண்ணீர், தற்போது ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், இவர்கள் ஒரு காலத்திலும் விற்ற பொருளுக்கு ரசீது கொடுப்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கேபிள் டிவி நிறுவனங்கள்
வீட்டுக்கு வீடு அரசு கேபிள் டிவி அல்லது தனியார் கேபிள் டிவி இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்களும் தங்கள் பங்குக்கு, இதுவரை 200 ரூபாய் மாதக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டிருந்தவர்கள் தற்போது ஜிஎஸ்டியை காரணம் காட்டி, 40-50 ரூபாய் வரை மாதக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். இவர்களும் வாங்கும் கட்டணத்துக்கு ரசீது கொடுப்பது இல்லை.
மளிகைக் கடை
பெரும்பாலான மளிகைக் கடைகளில் மக்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை பேக் செய்து கொடுத்தால் தான் வாங்குகிறார்கள் என்பதால் அனைத்து மளிகைப் பொருட்களையும் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்துதான் கொடுக்கிறார்கள். இந்தக் கடைகளில் ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்பு ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது அது 12-18 ரூபாய் வரை விலையேற்றி விற்கப்படுகிறது. இவர்களும் முறைப்படியான பில் கொடுப்பதில்லை.
சமையல் கேஸ்
இத்தனை துன்பங்களைப் பொறுத்துக்கொண்டால், அடுத்து இடியாக வந்து விழுகிறது கேஸ் சிலிண்டரின் விலை. மத்திய அரசு கேஸ் சிலிண்டருக்கான மானிய விலையை குறைத்த காரணத்தாலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பினாலும் ஒரு கேஸ் சிலிண்டர் விலை 32 ரூபாய் வரை விலை ஏறும் நிலை உள்ளது.
காய்கறி, கீரைக்கெல்லாம் ஜிஎஸ்டி?
பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்யும் நிலையில் தான் உள்ளார்கள். ஒரே மாதத்தில் தண்ணீர் கேன், கேபிள், சிலிண்டர், மளிகை சாமான் என குடும்பத்துக்குத் தேவையான பல பொருட்களின் விலை ஏற்றப்பட்டால், என்ன செய்வது என்று தெரியாமல் இல்லத்தரசிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இவர்களின் பயமெல்லாம் தெருவில் காய்கறி, பூ, கீரை விற்கும் அம்மாக்களும் ஜிஎஸ்டி என்று சொல்லிவிடக் கூடாதே என்றுதான் உள்ளது.












Click it and Unblock the Notifications