குலாம் நபி ஆசாத் இன்று வருகிறார்..சந்தோஷ செய்தி வரலாம்.. ஸ்டாலின் தகவல்
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனேகமாக இன்று சந்தோஷச் செய்தி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சியுடன் நடந்த முதல் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி 50க்கு குறையாமல் கேட்பதாகவும், திமுக தரப்பில் அதை விட குறைவாக தர முன்வந்ததாகவும், இதனால் இழுபறி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
இந்த நிலையில் திமுக தரப்பில் 41 தொகுதிகள் வரை முன்வந்திருப்பதாகவும், இதற்கு காங்கிரஸ் தரப்பில் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குலாம் நபி ஆசாத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக இன்று வருகிறார். அனேகமாக சந்தோஷம் தரும் வகையிலான செய்தி நாளை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஸ்டாலின் கூறுவதிலிருந்து திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கள் சுமூகமாக முடிவடையவுள்ளதாக தெரிகிறது.