தூத்துக்குடி துயரம்.. போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட்டில் மனு
மதுரை: தூத்துக்குடியில் 13 பேரை போலீசார் சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்ய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் மதுரை ஹைகோர்ட் கிளையில் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மறுநாளும் துப்பாக்கி சூடு தொடர்ந்தது. இதில் முதல் நாளில் 12 2வது நாளில் 1 என மொத்தம் 13 அப்பாவிகள் பலியானார்கள்.
இந்த விவகாரத்தில் போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி எஸ்எல்ஆர் வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. துப்பாக்கி சூடுக்கு ஆர்டர் போட்டது துணை வட்டாட்சியர்கள் என கூறப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்தில் அன்றைய தினம் பணியில் இல்லை என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஹென்றி தாமஸ் தனது மனுவில் "போலீசார் திட்டமிட்டு இந்த சதி செயலை அரங்கேற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூடுக்கு காரணமான, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டுக்கு போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்குகள் சென்னை, மதுரை ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications