ராசிகள் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்- 2014
சென்னை: அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த குருப்பெயர்ச்சி நாளை மாலை சரியாக 6.01 மணி அளவில் நடைபெற இருக்கின்றது.
அந்நேரத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
இந்த குருபெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்களை அளிக்க இருக்கின்றது என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியைப் பொருத்த வரையில் குருபகவான் 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகின்றார்.4 ஆம் இட குரு கொஞ்சம் கஷ்டங்களைத்தான் அதிகம் தருவார் என்றாலும் கவலை வேண்டாம்.உங்களின் பலம்-பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.
பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். அரசு வரிகளை உடனுக்குடன் செலுத்தவும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி ஈஸ்வரனையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு குருபகவான் 3ஆம் இடத்தில் அமர உள்ளார்.இச்சமயத்தில், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். சேமிப்பை கரைக்காதீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது.
முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.
பரிகாரம்: பிரதோஷ திருநாளில் தென்குடித்திட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக வசந்தமாகும்.
மிதுனம்:
மிதுன ராசிகாரர்களுக்கு குருபகவான் ஜென்ம குருவாக இவ்வளவு காலம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் 2 ஆம் வீட்டிற்கு படை எடுக்கின்றார்.குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
பரிகாரம்: பூரம், உத்திரட்டாதி நாள்களில் விழுப்புரம் அருகிலுள்ள பனையபுரம் ஸ்ரீபனங்காட்டீஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்.
கடகம்:
இதுவரை மிதுனத்திக் ஜென்ம குருவாக அமர்ந்த குருபகவான், நாளை கடகத்தில் குடியேறுகின்றார். இதனால், பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதாக நினைத்து வீண் பயம் வரும்.
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.
பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் பழநி முருகனையும் போகரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் குரு பகவான் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனத்துக்கான லைசன்ஸ், காப்பீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.
பரிகாரம்: உத்திராட நட்சத்திரத் திருநாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.
கன்னி:
உங்கள் ராசிக்கு குருபகவான் 11 ஆம் இடத்தில் அமர்வதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார்.பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனை அடைப்பீர்கள்.
வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.அரசு விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.
பரிகாரம்: பிரதோஷ திருநாளில் காஞ்சிபுரத்தில் அருளும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வினைகள் தீரும்.
துலாம்:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே... என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர்.
எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். நகை, பணத்தை இழக்க நேரிடும்.
பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.
விருச்சிகம்:
உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9 ஆம் வீட்டில் நுழைகிறார் குருபகவான்.இதனால் புது வியூகங்களால் முன்னேறத் துவங்குவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்குதீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர்வழி உறவினரும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.
பரிகாரம்: அமாவாசை நாளில் திருவிடைமருதூரில் அருளும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.
தனுசு:
உங்கள் ராசிக்கு குரு பகவான் 8 ஆம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வாய்க்கும். உங்களின் சில பலவீனங்களையும், பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னை மனத்தை வாட்டும்.
சந்தேகத்தையும், ஈகோவையும் ஒதுக்கிவையுங்கள்.அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு. சொத்து வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள்.
பரிகாரம்: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.தொலைந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்கும்.
மகரம்:
குருபகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார்.எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும்.
வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசு விஷயங்கள் நல்லவிதமாக முடியும்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.முடிவுகள் சிறப்பாக அமையும்.
கும்பம்:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 இல் மறைகிறார். "சகட குருவாச்சே... சங்கடங்களைத் தருவாரே" என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் அவர் செல்வதால் ஓரளவு நல்லதே நடக்கும்.
முயற்சியால் முன்னேறப் பாருங்கள். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிவீர்கள் என்றாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. செலவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சிலர், புறநகர்ப் பகுதியில் குடியேறுவர். வி.ஐ.பிகளை பகைக்க வேண்டாம். அரசு வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.
பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் விராலிமலைக்குச் சென்று ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.
மீனம்:
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 இல் அமர்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். அடிப்படை வசதி- வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல மணப்பெண் அமைவாள்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.
பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் நாமக்கல் சென்று, ஸ்ரீநரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
மொத்ததில் நம்முடைய நன்மை மற்றும் தீமைகள் நம்முடைய மனப் போக்கை வைத்தே நிர்ணயிக்கப் படுகின்றன.எவ்வளவு துன்பங்கள் புரட்டிப்போட்டாலும், மற்றவர்களிடம் கருணை காட்டும் மனிதர்களுக்கு குரு பகவான் கோடி நன்மைகளைத் தருவார் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.