சட்ட விரோத குட்கா விற்பனையில் யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம்?: உண்மை அடங்கிய ஆவணங்கள் திடீர் மாயம்?
தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : குட்கா விற்பனை விவகாரத்தில் ஆதாயம் பெற்றதாக வருமான வரித்துறை அளித்த அதிகாரிகள், அமைச்சர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரபல குட்கா வியாபாரியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த விவரங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை வருமான வரித்துறை அரசிடம் ஒப்படைத்திருந்தது. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவிடம் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்ப்டடுள்ளன.
வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் மீது ஓராண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது குட்கா, பான்மசாலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரச்னை தீவிரமான நிலையில் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 421 பேர் கைது செய்யப்பட்டு, 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவணம் மாயம்
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம மோன ராவிடம் அளித்த அந்த ஆவணம் மட்டும் காணவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே மாயமான கடிதம் குறித்து விசாரணை நடத்த ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சந்தேகத்தை எழுப்பியுள்ளது
தலைமைச் செயலகத்தில் இருந்தே ஆவணங்கள் மாயமாகியுள்ளது பெரும் புயலைக் கிளப்பும் என்று கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை டிஜிபி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஆழமான குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் அவை மாயமாகியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோர்ட்டில் தகவல்
எனினும் நீதிமன்றத்தில் இது போன்ற ஒரு ஆவணமே அரசுக்கு வரவில்லை என்று தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார். குட்கா பான்மசாலா ஊழல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமாளிக்கும் வேலையா
குட்கா விவிகாத்தில் தொடர்புடைய அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில் வருமான வரித்துறை அப்படி ஒரு ஆவணமே கொடுக்கவில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் ஆவணம் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விஷயத்தை சமாளிப்பதற்கான யுத்தியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications