ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? நெற்றியில் வைத்த பொட்டை அழித்தாரா ஸ்டாலின்? ஹெச்.ராஜா கண்டனம்
Recommended Video
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர்களின் திருமண விழா மற்றும் காதணி நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைப்பதற்காக நேற்று ஸ்ரீரங்கத்திற்கு சென்றிருந்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருமண மண்டபத்திற்கு செல்வதற்கு முன் ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்த கார்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்பாக நிறுத்தப்பட்டன. அப்போது அங்கு ஏற்கனவே பூஜை நடத்திய மாலை மற்றும் பொருட்களுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தலைமை பட்டர்களில் ஒருவரான சுந்தர் நின்று கொண்டிருந்தார்.
மேள தாளமும் முழங்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் காரில் இருந்து இறங்கினார்.
மாலை , மரியாதை
அவருக்கு பட்டு சால்வையை சுந்தர் பட்டர் அணிவித்து வரவேற்று நெற்றியில் கோயில் திலகம் வைத்தார். இதனை தொடர்ந்து தாம்பாள தட்டில் இருந்த மாலையை எடுத்து யானையிடம் கொடுத்தனர். யானை அந்த மாலையை ஸ்டாலினுக்கு அணிவித்து ஆசீர்வாதம் வழங்கியது.
கரும்பு, வெல்லம்
இதையடுத்து மு.க.ஸ்டாலின் அந்த யானைக்கு கரும்பு துண்டுகள் மற்றும் வெல்ல கட்டிகள் ஆகியவற்றை வழங்கினார். கடவுள் மறுப்பு கொள்கையாளராக அறியப்பட்ட ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் மரியாதையை ஏற்றுக்கொண்டது சமூக வலைத்தளங்களில் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. திமுகவினரோ, பூசாரிகள்தான் ஸ்டாலின் காரை நிறுத்தி மரியாதை அளித்ததாக கூறி வருகிறார்கள்.
யாகம் நடந்ததா?
பிற எதிர்நிலை கட்சியினரோ, ஸ்டாலின் தரப்பில் யாகம் செய்ய கேட்டுக்கொண்டதாகவும், அந்த யாகத்தின் முடிவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகிறார்கள். இருப்பினும் ஸ்டாலின் நேரடியாக இதுபற்றி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ஸ்டாலினுக்கு திலகமிட்டபோது அவர் அதை உடனடியாக அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டித்துள்ளார்.
|
ராஜா கண்டனம்
எச்.ராஜா வெளியிட்ட டிவிட்டில், "ஆத்திகராக இருந்தால் முழுமையாக இந்துக்களை மதிக்க வேண்டும். கோவிலில் யாகம் ஏற்பாடு செய்வது ஆனால் பொட்டு வைத்தால் அதை அழிப்பது என்பது இந்து நம்பிக்கையை அவமதிப்பதாகும். சிறுத்தையின் புள்ளிகளை ஒருபோதும் அழிக்க முடியாது. திமுக ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது". இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.