திராவிட நாடு என்பது தண்டனைக்குரிய குற்றம்.. எச்.ராஜா எச்சரிக்கை
பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இன்னமும் இருக்கிறது என்று எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை : பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இன்னமும் இருக்கிறது என்று எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கையை வரவேற்பதாக நேற்று வெளியான செய்தி தீயாய் பற்றி எறிகிறது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கை அண்ணா அவர்களாலேயே கைவிடப்பட்டுவிட்டது, ஆனால் இப்போது தேவையின்றி திமுக திராவிட நாடு கோரிக்கைக்காக குரல் கொடுப்பது போலவும் ஆதரவு தெரிவிப்பது போலவும் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்ற பெயரில் தனிநாடாக்க பெரியார் முயற்சித்தார். 1940களில் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்கிற அண்ணாவின் பேச்சுகள் பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்தது. திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து திமுகவை உருவாக்கிய தொடக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ஆனால் அரசியல் ரீதியாக அண்ணாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதை உணர்ந்தவர் காலப்போக்கில் அந்த கோரிக்கையை ஒத்திவைத்தார்.
அண்டை மாநிலங்களின் கோரிக்கை
தொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும் தான் திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்டவை திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளன.
தெலுங்குதேசம் கட்சி எம்பியின் பேச்சு
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நிறைவேறாததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது. அந்த கட்சியின் எம்பி முரளிமோகன் 5 தென்னிந்திய மாநிலங்களையும் தனி நாடு கோரிக்கையை எழுப்ப வைத்துவிடாதீர்கள் என்று கடந்த மாதத்தில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
கேரளா எழுப்பிய குரல்
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த தென்னிந்திய மாநிலம் கேரளா. யாரும் எதிர்பாராத விதமாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரும் கோரிக்கையை கேரளா முன்வைத்தது. இவ்வாறாக திராவிட நாடு கோரிக்கை மீண்டும் தீவிரமாகி வருவது தேசிய அளவில் உற்று நோக்கப்படுகிறது.
|
பிரிவினை கோருவது குற்றம்
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மிரட்டும் ரீதியிலான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் ட்வீட்டியுள்ளார்.