குடும்ப கட்டுப்பாட்டால் ஆபத்து.. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. மணமக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
தஞ்சாவூர்: மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்வதால், மணமக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று திருமண விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இது சீர்திருத்த திருமணமாக நடைபெற்றுள்ளது. 1967-க்கு முன்பாக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெறவில்லை. ஆனால், அண்ணா முதல்வராக பதவியேற்ற பின்பு 1967 ஆம் ஆண்டு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழகம் தான் சட்டமாக்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இந்த விழாவில் தமிழில் பேசியதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு வரும்போது எல்லாம், உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பு தமிழில் வெளியாகிறது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம். அதேவேளையில், உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர நீங்கள் எங்களோடு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். அதேபோல, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது நல்லது.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை. இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர். குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கான நிலை உருவாகி இருக்கிறது.
ஏனென்றால் மக்கள் தொகை அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடை சரியாக பின்பற்றியதால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நாடாளுமன்ற எண்ணிக்கை குறையும் சூழ்நிலை வந்திருக்கிறது. அதனால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications