கடலூர் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைக்கும் முதலைக்கும் சண்டை! பொதுமக்கள் அதிர்ச்சி
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே முதலைக்கும் முதலைக்கும் நடந்த சண்டை காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சண்டை காட்சியை ஊர்மக்கள் சிலர் பார்வையிட்டு வீடியோ எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதியில் மேல தவர்த்தாம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்கால் குமராட்சி, வேளக்குடி, அகரநல்லூர்,காட்டு கூடலூர்,நந்தி மங்கலம்,கீழ தவர்த்தாம்பட்டு,மேல தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது.
இந்த வாய்க்காலுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக தண்ணீர் வரத்து எப்போதும் இருக்கும். இந்த உப்பனாற்றில் 100 க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த வாய்க்காலில் இறங்கிய பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடுகளை ராட்சத முதலைகள் கடித்து கொன்று இருக்கின்றன.
இதனால் உயிருக்கு அஞ்சி பொதுமக்கள் இந்த வாய்க்காலில் இறங்க அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் முதலை நடமாட்டம் அதிகம் உள்ளது. பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.
இந்நிலையில் மேல் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் உள்ள உப்பனாறு வடிகால் வாய்க்காலில் இரண்டு ராட்சத முதலைகள் சண்டை போடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதனை அங்கிருந்த இளைஞர்கள் தனது மொபைல் போன் மூலம் வீடியோவாக பதிவிட்டு அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். முதலைகள் சண்டை போடும் காட்சி இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
பாம்புக்கும் கீரிக்கும் இடையே சண்டையை கூட சிலர் வீடியோவாக எடுத்து போட்டுள்ளனர். அது போல் இரு பாம்புகள் இணையும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வலம் வந்துள்ளன. அந்த வகையில் வித்தியாசமான வகையில் இரு முதலைகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications