மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக மாஜி நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் ஜூன் 19ல் முடிந்தது.
மருத்துவ கவுன்சிலுக்கு மாஜி உயர் நீதிமன்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்கக் கோரி, கவுன்சிலின் பொறுப்பு தலைவராக உள்ள சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஜூன் 20ம் தேதி நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. கவுன்சில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததால், அமைதியாக தேர்தல் நடத்த முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அமையும் வரை, மருத்துவ கவுன்சிலுக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று வாதித்தட்டார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கவுன்சிலின் தேர்தலை நடத்தும் அதிகாரியாகவும் வெங்கட்ராமன் செயல்படுவார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.