வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் - சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க தேவையில்லை என உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை: வெங்கடேச பண்ணையாரை என்கவுண்டர் செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது மனைவி ராதிகா செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரிக்க தேவையில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நாடார் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த வெங்கடேச பண்ணையார் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தங்களை பண்ணையார் தாக்க முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதாக அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் கூறினார். ஆனால், நாடார் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு காரணமாக விஜய்குமார் மாற்றப்பட்டு அதிரடிப்படைக்கு அனுப்பப்பட்டார்.

வெங்கடசே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை மாநில அரசு நியமித்தது. ஆனால் கமிஷன் நியமிக்கப்பட்ட சில
நாட்களிலேயே திருச்சியில் நீதிபதி ராமனின் மருமகன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெங்கடேச பண்ணையாரின் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரது மனைவியும், அப்போதய திருச்செந்தூர் திமுக எம்.பியுமான
ராதிகா செல்வி, கடந்த 2005ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், என்கவுண்டர் என்ற பெயரில் எனது கணவரை போலீஸார் வேண்டும் என்றே சுட்டுக் கொன்று விட்டனர். இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் விசாரணையை
இன்னும் தொடங்கவே இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க தேவையில்லை என உத்தரவிட்டனர். அவரது மனைவி ராதிகா செல்வி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து என்கவுண்டர் வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications