ராமஜெயம் கொலை வழக்கு: டைம் கேட்கும் சி.பி.சி.ஐ.டி.... மார்ச் வரை அவகாசம் !
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் அவகாசம் தேவை என சிபிசிஐடி கேட்டுக் கொண்டதற்கிணங்க, வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கிரானைட், ரியல் எஸ்டேட், விவசாயம், ஏற்றுமதி உட்பட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2012 மார்ச் 29 காலை நடைப்பயிற்சி சென்ற ராமஜெயம், திருச்சி சர்க்கார்பாளையம் ரோடு காவிரியாறு பகுதியில் சடலமாக மீட்கப் பட்டார்.

இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை 2012 ஜூன் 22 ல் சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கொலை நடந்து 32 மாதங்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனவே, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் மனைவி லதா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் எஸ்.ரவி ஆஜரானார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "இதுவரை 177 சாட்சிகளிடம் விசாரித்துள்ளனர். போலீஸ் உயரதிகாரிகள் கண்காணிப்பில் விசாரணை நடக்கிறது. மேலும் அவகாசம் தேவை," என்றார்.
மேலும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி., சார்பில் அறிக்கை ஒன்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த விசாரணை மார்ச் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications