லைக்காவிற்கு எதிராக வேல்முருகன் பேச்சாம்… ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கில் ஐகோர்ட்டில் நோட்டீஸ்
10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜூன் 8ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி
சென்னை: லைக்கா நிறுவனம் குறித்த தனது பேச்சிற்காக வேல்முருகன், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோரி லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வவுனியாவில் மார்ச் மாதம் 10ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டனர். மேலும், ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.

கண்டனம்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இதனால் கடுப்பான லைக்கா நிறுவனம் கடுமையான கண்டனத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்தது.

குற்றச்சாட்டு
இதனிடையே, மார்ச் மாதம் 25ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் கலந்து கொண்டார். அதில், ராஜபக்சேவிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மானநஷ்டம்
இதனைக் கண்டித்த லைக்கா நிறுவனம், வேல்முருகன் மீது மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியது. வேல்முருகனின் பேச்சால் வியாபாரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

வழக்கு
இதனிடையே, மார்ச் 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் எழும்பூர் நீதிமன்றத்திலும் வேல்முருகனுக்கு எதிராக மனு ஒன்றை லைக்கா நிறுவனம் தாக்கல் செய்தது. இதில் வேல்முருகன் கூறிய கருத்தால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

நோட்டீஸ்
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஜூன் 8ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications