லிங்கா நஷ்டம், உண்ணாவிரதம்... விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லிங்கா பட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லிங்கா படத்தை திருச்சி - தஞ்சைப் பகுதியில் வெளியிட்ட மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த நஷ்டத்தை ஈடு செய்யும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை யாரும் கவனிக்காததால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அல்லது அரசு விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 10 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது.

ஆனால் இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இதுபற்றி விளக்கம் பெற இரண்டு நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றார் .
அதற்கு நீதிபதி மறுத்து விட்டார். "மனுதாரர் உண்ணாவிரதம் இருக்கத்தான் அனுமதி கேட்டுள்ளார். அதற்கான பதிலை நாளைக்குள் தெரிவிக்கவும்," என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications