தமிழக அரசு விளம்பரங்களில் கட்சி சின்னம்- ஜெயலலிதா உட்பட 20 பேருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழக அரசு விளம்பரங்களை அதிமுக அரசு தனது சுய லாபத்திற்காக உபயோகப்படுத்துவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க முதல்வர் ஜெயலலிதா உட்பட 20 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசு தனது விளம்பரங்களில் அதிமுக கட்சி சின்னங்களையும், முதல்வர் படத்தையும் வெளியிட்டு தமிழக மக்களின் வரிப்பணத்தை சுய விளம்பரத்திற்காக உபயோகப்படுத்துவதாக திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "அரசு விளம்பரங்களில் முதல்வர் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று சமீபத்தில் உச்நீசதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் தமிழக அரசு வெளியிடும் விளம்பரங்களில் ஜெயலலிதாவின் பெயர், படம் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுர விளம்பரங்களில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் அம்மா என்று குறிப்பிட்டுள்ளனர். இதுபோல அரசு விளம்பரங்கள், அரசு வெளியிடும் துண்டு பிரசுரங்களில் என அனைத்து விளம்பரங்களிலும் ஜெயலலிதா பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிடுகின்றனர்.
இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும், மாநில தேர்தல் அதிகாரிக்கும் தமிழக அரசு உள்துறை செயலாளர், தலைமை செயலாளருக்கும் புகார் மனு கொடுத்தோம். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் மனு கொடுத்தோம். அதில் அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர், புகைப்படம் வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தோம். மாவட்ட கலெக்டர்கள் நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்களில் ஜெயலலிதா படம் போட்டுத்தான் விளம்பரங்கள் வெளியிடுகின்றனர்.
இதுதவிர நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்றும் அரசு விளம்பரங்களில் குறிப்பிடுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். அரசு பணம் முதல்வர் ஜெயலலிதாவின் விளம்பரத்துக்காக வீணடிக்கப்படுகிறது. உடனடியாக இந்த விளம்பரத்தை பறிமுதல் செய்ய கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என ஜெயலலிதா உட்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications