விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்க்கு ஹைகோர்ட் அனுமதி: விவசாயிகள் அதிர்ச்சி!
கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் இந்தியா நிறுவனம் துவங்கியது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி துவங்கியது.
இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அரசு தடை
விவசாயிகளின் எதிர்ப்பையடுத்து இந்த திட்டத்தை விளை நிலங்கள் வழியாக மேற்கொள்ள தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து இந்த 7 மாவட்டங்களிலும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க தமிழக அரசு தடை விதித்தது. தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த குழாய்களை பதிக்கவும் அரசு உத்தரவிட்டது. இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
கெயில் வழக்கு
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கெயில் நிறவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
‘இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘ரூ.3 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலத்துக்கு அடியில்தான் எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது. இதனால் விவசாயம் நடைபெறும் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து திட்டமிட்டபடி எரிவாயு குழாய் பதிக்க அனுமதி வழங்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
குழாய் பதிக்க அனுமதி
இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ்குமார் அகர்வால் நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள்.
120 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு விதித்த தடையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு அடியில் எரிவாயு குழாய்களை பதித்துக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் அதிர்ச்சி
இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் அமைப்பதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இரண்டு அடி விட்டமுள்ள எரிவாயுக் குழாய் அமைக்க, 20 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை எடுக்கிறார்கள்.
விவசாயம் பாழாகும்
நிலத்துக்கு குறுக்கே குழாய்களைப் பதித்தால் விவசாயமே செய்ய முடியாத சூழ்நிலை வந்துவிடும். எரிவாயு திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்லலாம் என்பது தான் எங்கள் கோரிக்கை. தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லலாம். விரைவில் விவசாயிகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஆலோசித்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.